Friday, May 21, 2010

செய்யும் தொழில் உன் தொழிலே!


ஏதோ ஒரு காலத்தில் (கற்பத்தில்) விநாயகப் பெருமான் நான்முகப்பிரமனாக இருந்து எல்லா உலகையும் படைத்ததாக வேதங்கள் சொல்லும். கணானாம் த்வா என்று தொடங்கும் வேத மந்திரம் பிரம்ம தேவனே கணபதி என்று சொல்லும். பாரதியாரும் அந்த கருத்துப்படி பல பாடல்களில் பாடியிருக்கிறார். இந்தப் பாடலில் விநாயகரை நான்முகப் பிரம்மனாகவே எண்ணிப் பாடுகிறார். நடுவில் யானை முகனே என்று வரும் ஒரு சொல்லை மட்டும் எடுத்துவிட்டால் இது முழுக்க முழுக்க பிரம்ம தேவனைப் போற்றும் பாடலாகவே தோன்றும்.

செய்யும் தொழில் உன் தொழிலே காண்
சீர் பெற்றிட நீ அருள் செய்வாய்
வையம் தனையும் வெளியினையும்
வானத்தையும் முன் படைத்தவனே
ஐயா நான்முகப் பிரமா
யானை முகனே வாணிதனை
கையால் அணைத்துக் காப்பவனே
கமலாசனத்துக் கற்பகமே


செய்யும் செயல்களெல்லாம் தெய்வத்தின் செயலே என்று எண்ணிச் செயல்களை நிகழ்த்துபடி கீதையில் கண்ணன் சொல்கிறான். அந்தக் கட்டளையை அப்படியே ஏற்றுக் கொண்டு பாரதியார் இங்கே பேசுகிறார். 'செய்யும் தொழில் உன் தொழிலே காண்' என்கிறார். அடுத்து தான் பாரதியின் குறும்பு வருகிறது. நான் செய்பவை எல்லாம் உன் செயல்கள் தான் என்றவர் உன் செயல்கள் சீர் பெற்றிட வேண்டும் அதற்கு நீ அருள் செய்வாய் என்கிறார். என் செயல்கள் சீர் பெற்றிட அருள் செய்வாய் என்றால் வேன்டுதல் ஆகிவிடும். உன் செயல்கள் தான் எல்லாமே; அவை சீர் பெற்றிட நீ அருள் செய்வாய் என்றால் அது ஒரு நினைவூட்டல் மட்டும் தானே. :-)

வாணியைக் கையில் அணைத்துக் காக்கும் ஐயனே; நான்முகப் பிரமனே; யானை முகனே; தாமரை ஆசனத்தில் அமர்ந்திருக்கும் வேண்டியதை எல்லாம் வழங்கும் கற்பகமே! உலகங்களையும் வானத்தையும் வானவெளியையும் முன்பு படைத்தவனே! உன் செயல்களே ஆன என் செயல்கள் எல்லாம் சீர் பெற்றிட நீ அருள் செய்வாய்!


இந்தப் பாடலை நித்யஸ்ரீ பாடி இங்கே கேட்கலாம்.

***

நான்மணிமாலை - அந்தாதியாக வெண்பா, கலித்துறை, விருத்தம், அகவல் என்று மாற்றி மாற்றி பாடல்களைப் புனைந்து சூட்டுவது நான்மணிமாலை எனப்படும். இரண்டாம் பாடல் செய்குவனே என்று நிறைய இந்த மூன்றாம் பாடல் செய்யும் என்று தொடங்குகிறது. இந்தப் பாடல் கற்பகமே என்று நிறைய அடுத்தப் பாடல் கற்பகவிநாயக என்று தொடங்கும். இந்தப் பாடல் விருத்தம் என்ற பா வகையைச் சேர்ந்தது.

எதுகை: செய்யும், வையம், ஐயா, கையால்

மோனை: செய்யும் - சீர், வையம் - வெளியினையும் - வானத்தையும், ஐயா - ஆனை, கையால் - காப்பவனே - கமலாசனத்து - கற்பகமே.

No comments: