Friday, May 28, 2010

காலைப் பிடித்தேன் கணபதி!


காலைப் பிடித்தேன் கணபதி நின் பதம் கண்ணில் ஒற்றி
நூலைப் பல பலவாகச் சமைத்து நொடிப்பொழுதும்
வேலைத் தவறு நிகழாது நல்ல வினைகள் செய்து உன்
கோலை மனமெனும் நாட்டில் நிறுத்தல் குறியெனக்கே

மூன்று வேண்டுதல்களை இந்தப் பாட்டில் வைக்கிறார் பாரதியார். பற்பல நூற்களைச் சமைக்க வேண்டும். நொடிப்பொழுதும் வேலைத் தவறு நிகழாமல் நல்ல வினைகள் செய்ய வேண்டும். கணபதியின் ஆட்சியை மனத்தில் நிலை நிறுத்த வேண்டும்.

சரணாகதியில் இரு விதம் சொல்லுவார்கள். 'எனக்குக் குழப்பம் மிகுந்து விட்டது. அதனால் எது சரி எது தவறு என்பது புரியவில்லை. உன் சீடனாகச் சரணடைகிறேன்' என்று கூறி கண்ணனை அருச்சுனன் சரணடைந்தானே அது ஒரு வகை சரணாகதி. எல்லா நெறிகளையும் சொல்லிவிட்டு விஸ்வரூப தரிசனமும் காட்டிவிட்டு தனது பெருமைகளை எல்லாம் விவரித்து விட்டு கடைசியில் 'எல்லாவற்றையும் விட்டுவிட்டு என்னையே சரணாக அடைவாய்' என்று கண்ணன் சொல்ல அதற்கு ஏற்ப அருச்சுனன் செய்யாமல் செய்கிறானே அது இன்னொரு வகை சரணாகதி.

இங்கே வேண்டுதல்களை வைக்கும் முன் 'காலைப் பிடித்தேன் கணபதி' என்கிறார் பாரதியார். இங்கே காலைப் பிடிக்கிறாரே அது மேலே சொன்ன இரு வகை சரணாகதியில் எந்த சரணாகதி என்று தோன்றுகிறது?

தன்னலம் மிக்கதோரு தருணத்தில் இறைவன் காலைப் பிடிப்பது முதல் வகை. அப்படியா இங்கே பாரதியார் செய்கிறார்? மேலோட்டமாகப் பார்த்தால் அவர் ஒரு புலவர்; அதனால் பல நூல்களைச் சமைக்க வேண்டும் என்று தன்னலத்துடன் வேண்டுவதாகத் தோன்றுகிறது. அப்படி பல நூல்களைச் சமைக்கும் போது அவற்றில் எந்த வேலைத் தவறும் நிகழாமல் இருக்க வேண்டும் என்ற வேண்டுதல் வைக்கிறார்; அதுவும் தன்னல வேண்டுதலாகத் தோன்றுகிறது. ஆனால் கடைசி வரியைப் பார்த்தால் அவர் தன்னல வேண்டுதல் வைப்பதாகத் தோன்றவில்லை. உன் ஆட்சி என் மனத்தில் நிலைக்க வேண்டும் என்று சொல்லும் போதே 'மன் மனா பவ; மத் யாஜி - என்னையே மனத்தில் வை. என்னை வணங்கு' என்றெல்லாம் கீதையில் கண்ணன் சொன்னானே அவை பிரதிபலிப்பது போல் தோன்றுகிறது.

இறைவனின் ஆட்சி மனத்தில் நிலைபெற்றால் 'செய்யும் தொழில் உன் தொழிலே; சீர் பெற்றிட நீ அருள் செய்வாய்' என்று இன்னொரு இடத்தில் பாடுகிறாரே அது போல் இறைவனின் கருவியாக இவ்வுலகத்தில் செயலாற்றிட முடியும். அப்படிச் செயலாற்றும் போது செய்யும் செயல்களில் தவறு நடக்காது. செயல்களும் பல மடங்கு நடக்கும். 'யோக: கர்மஸு கௌசலம் - யோகம் என்பது செய்யும் செயல்களில் முழுமை' என்று கண்ணனும் கீதையில் சொல்கிறான்.

ஆக, இந்தப் பாடலில் கணபதி காலைப் பிடித்த போது இரண்டாவது வகை சரணாகதையைத் தான் பாரதியார் செய்வதாகத் தோன்றுகிறது. பின்னர் வைக்கும் வேண்டுதல்கள் அதனை உறுதி செய்கிறது. அவன் அரசாட்சியில் மனத்தில் நிலை நிறுத்த வேண்டும்; அதனால் நூல்கள் பல பலவாய் செய்யப்படும்; நொடிப்பொழுதும் வேலைத் தவறு நிகழாதிருக்கும்; நல்ல வினைகள் செய்யப்படும். இதுவே எனக்குக் குறி. இவற்றை எல்லாம் செய்யம் நாமும் கணபதியின் தாளினை கண்ணில் ஒற்றிக் செயல்கள் செய்வோம்.

Thursday, May 27, 2010

கணபதியைப் போத வடிவாகப் போற்றிப் பணிந்திடுமின்!


உணர்வீர் உணர்வீர் உலகத்தீர் இங்குப்
புணர்வீர் அமரர் உறும் போகம் - கணபதியைப்
போத வடிவாகப் போற்றிப் பணிந்திடுமின்
காதலுடன் கஞ்சமலர்க் கால்

அறிவொன்றே தெய்வம் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துபவர் பாரதியார். சுத்த அறிவே சிவம் என்று கூறும் சுருதிகளைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசுபவர். இறைவன் அறிவு மயமாக இருக்கிறான் என்பது ஆன்மிகம் மீண்டும் மீன்டும் வலியுறுத்தும் கருத்து. எந்த அறிவைப் பெற்ற பின் வேறு எதுவும் தெரிய வேண்டியதில்லையோ அந்த அறிவே பிரம்மம் என்று வேதங்களும் பேசும். அந்த அறிவு அன்பின் அடிப்படையில் ஆன அறிவாக இருக்கும் போது இன்னும் மேன்மை. அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் என்று அன்பு, சிவம், அறிவு மூன்றையும் ஒரே மூச்சில் இணைப்பார் திருமூலர். அப்படி அன்பும் அறிவும் இணைந்த உருவாக கணபதியைப் போற்றிப் பணிந்திடுங்கள் என்று இங்கே சொல்கிறார்.

இதனை ஏன் 'உணர்வீர் உணர்வீர்' என்று இருமுறை சொல்லி வலியுறுத்தவேண்டும்? உலகத்தவர் எல்லா போகங்களையும் தேடி அலைகின்றார்கள். அதனை எந்த முறையிலேனும் அடைந்து விடத் துடிக்கிறார்கள். அப்படிப் பட்டவர்களிடம் ஒரு முறைக்கு இருமுறை வலியுறுத்தினாலாவது கேட்க மாட்டார்களா என்று நினைத்தார் போலும்.

கணபதியை போத வடிவாகப் போற்றிப் பணிந்தால் 'இனி மேல் என்றோ ஒரு நாள் வருங்காலத்தில்' அமரர்கள் அடையும் இன்பத்தை அடையலாம் என்று சொல்லவில்லை அவர். இங்கேயே இப்போதே அமரர் உறும் போகத்தை புணரலாம் என்று அறுதியிடுகிறார். அறிவொன்றே தெய்வம் என்ற தெளிவு வந்த பின் வேறெதையும் தேடி அலையாத மனம் கிடைத்துவிடுமே. அந்த நிலை அடைந்தால் ஆனந்தம் தானே வருமே. அதனால் 'இனி மேல்' என்றோ 'வேறுலகில்' என்றோ சொல்லாமல் இங்கேயே புணர்வீர் என்று சொல்கிறார்.

அறிவுடன் இருப்பது என்பது இறைவனுக்கு உருவம் உண்டா என்ற கேள்வியை எழுப்புவது என்றதொரு கருத்து வலிவுடன் இருக்கிறது. எல்லா உருவங்களும் ஆன இறைவனுக்கு ஓருருவம் ஒரு பெயர் என்று கற்பித்தல் மட்டுமே தவறு; ஆயிரம் உருவங்களும் ஆயிரம் பெயர்களும் இருப்பது இயற்கை. அதுவே பகுத்தறிவாக இருக்க முடியும். அறிவு வடிவமாக கணபதியைப் போற்றுங்கள் என்னும் போது அந்த அறிவு உருவமான தெய்வத்திற்கு 'உருவம்' உண்டு என்பதைக் காட்டுவது போல் 'மென்மையான மலர்க்கால்களை'ப் பணிந்திடுங்கள் என்று சொல்கிறார்.

எல்லாவற்றிலும் முத்தாய்ப்பாக இன்னொன்றையும் சொல்லுகிறார். கண்பதியை அறிவு வடிவாகப் போற்றிப் பணிந்திட்டால் மட்டுமே போதுமா? முக்கியமான ஒன்று குறைகிறதே. அந்த ஒன்று இருந்தால் தானே நிறைவு பெற முடியும். காதலுடன், அன்புடன், பக்தியுடன் அவன் திருவடிகளைத் தொழ வேண்டும் என்கிறார். அந்தக் காதல் இன்றி அறிவே உயர்ந்தது என்று எவ்வளவு தான் கூறினாலும் அது தெய்வத்தைத் தொழுவது ஆகாது. அன்புடன் கூடிய அறிவே தெய்வம் என்பதை மீண்டும் இங்கே ஒரு முறை வலியுறுத்துகிறார்.

***

நான்மணிமாலை - அந்தாதியாக வெண்பா, கலித்துறை, விருத்தம், அகவல் என்று மாற்றி மாற்றி பாடல்களைப் புனைந்து சூட்டுவது நான்மணிமாலை எனப்படும். நான்காம் பாடல் இஃதுணர்வீரே என்று நிறைய இந்தப் பாடல் உணர்வீர் என்று தொடங்கியது. இந்தப் பாடல் கால் என்று நிறைய அடுத்தப் பாடல் காலைப் பிடித்தேன் என்று தொடங்கும். இந்தப் பாடல் வெண்பா வகையைச் சேர்ந்தது.

எதுகை: உணர்வீர் - புணர்வீர் - கணபதியை, போதவடிவாக - காதலுடன்.

மோனை: உணர்வீர் - உணர்வீர் - உலகத்தீர், புணர்வீர் - போகம், போத - போற்றி - பணிந்திடுமின், காதலுடன் - கஞ்சமலர் - கால்.

Monday, May 24, 2010

கற்பக விநாயகக் கடவுளே போற்றி!


கற்பக விநாயகக் கடவுளே போற்றி!
சிற்பர மோனத் தேவன் வாழ்க!
வாரண முகத்தான் மலர்த்தாள் வெல்க!
ஆரண முகத்தான் அருட்பதம் வெல்க!
படைப்புக்கிறையவன், பண்ணவர் நாயகன்
இந்திர குரு எனது இதயத்தொளிர்வான்
சந்திர மவுலித் தலைவன் மைந்தன்
கணபதி தாளைக் கருத்திடை வைப்போம்!
குணமதில் பலவாம்; கூறக் கேளீர்!
உட்செவி திறக்கும்; அகக்கண் ஒளிதரும்;
அக்கினி தோன்றும்; ஆண்மை வலியுறும்;
திக்கெலாம் வென்று ஜெயக்கொடி நாட்டலாம்;
கட்செவி தன்னைக் கையிலே எடுக்கலாம்;
விடத்தையும் நோவையும் வெம்பகை அதனையும்
துச்சமென்றெண்ணித் துயரிலாது இங்கு
நிச்சலும் வாழ்ந்து நிலை பெற்று ஓங்கலாம்;
அச்சம் தீரும்; அமுதம் விளையும்;
வித்தை வளரும்; வேள்வி ஓங்கும்;
அமரத் தன்மை எய்தவும்
இங்கு நாம் பெறலாம்; இஃதுணர்வீரே

வானுலகத்தில் இருக்கும் கற்பக மரம் வேண்டியதை எல்லாம் தரும் என்று புராணங்கள் சொல்கின்றன. விநாயகப் பெருமானும் அப்படியே. அதனால் அவருக்கு கற்பக விநாயகக் கடவுள் என்றே பெயர். 'கற்பகம் என வினை கடிது ஏகும் - கற்பகவிநாயகா என்று சொன்னால் நாம் செய்த தீவினைப் பயன்கள் எல்லாம் விரைவாக ஓடிவிடும்' என்று அருணகிரி பெருமானும் சொல்கிறார். அந்தக் கடவுளை கருத்தினில் வைத்தால் என்ன என்ன கிடைக்கும் என்று இனி சொல்லப் போவதால் தொடங்கும் போதே கற்பக விநாயகக் கடவுளே போற்றி என்று தொடங்குகிறார்.

இறைவன் அறிவே உருவானவன். அறிவின் விரிவுகளில் பல வகை இருக்கின்றன. ஓரறிவு முதல் ஆறறிவு வரை உயிரினங்களின் அறிவினைச் சொல்கிறார்கள். சித் என்பது அறிவைக் குறிக்கும் சொல். இந்த ஆறறிவிலும் மேலாக எல்லாவற்றையும் அறியும் பேரறிவாளனாக இறைவன் இருக்கிறான். அவனைச் சிற்பரன் என்கிறார். அறிவு விரிய விரிய அமைதி கூடுகின்றது. மேலான எக்குறையும் அற்ற அறிவினையுடையவனாக ஒருவர் ஆகும் போது அங்கே அமைதியுடன் மௌனமெனும் மோன நிலையும் கூடுகிறது. விநாயகப் பெருமானை சிற்பரன் என்றதோடு மோனத் தேவன் என்று சொல்லி அவனை வாழ்த்துகிறார் பாரதியார்.

முற்றறிவின், ஞானத்தின் அடையாளமாக யானையைக் கூறுவார்கள். இங்கே வாரணமுகத்தானும் (யானைமுகத்தானும்) அந்த ஞானத்தின் அடையாளமாகத் தான் நிற்கிறான். அவனுடைய மலர் போன்ற திருவடிகள் எங்கும் வெல்லட்டும். அறிவே எங்கும் வெல்லட்டும்.

முற்றறிவின் வெளிப்பாடாய் வெளிவரும் எல்லா நூல்களும் வேத நூல்களே. அவற்றினை தன் திருமுகமாகக் கொண்டவன் விநாயகன். வேதங்களைத்/ஆரணத்தைத் திருமுகமாகக் கொண்டிருக்கும் தேவனின் அருட்திருவடிகள் எங்கும் வெல்லட்டும். அறிவும் அருளும் எங்கும் வெல்லட்டும்.

கணபதி எல்லாப் படைப்புகளுக்கும் இறையவன். இறைவன் என்றால் சொத்தினை உடையவன் என்று பொருள். இங்கே படைக்கப்பட்ட எல்லாவற்றையும் உடையவன் கணபதி.

அறிவும் அருளும் அழகும் சேர்ந்து இயங்கும் இடம் கலைகளின் இடம். சிறந்த கலைகளில் இசைக்கலையும் ஒன்று. அந்த இசைக்கலையில் வல்லவர்களைப் பண்ணவர்கள் என்பர். அந்த இசைவாணர்களின் தலைவன் பண்ணவர் நாயகன் கணபதி.

நல்ல குணங்களை எல்லாம் தேவர்களாக உருவகித்தால் அந்த நற்குணங்களில் எல்லாம் சிறந்த குணமொன்றைத் தேவர் தலைவன் இந்திரன் எனலாம். கணபதி அந்த நற்குணங்கள் எல்லாம் பொருந்தியவன். இந்திரனுக்கும் குரு.

இதயத்தில் அன்பாக இருந்து அருளுபவனும் இறைவனே. அன்பும் அறனும் உடைத்தாயின் வாழ்க்கைப் பண்பும் பயனும் அது என்றார் வள்ளுவப் பெருந்தகை. அந்த அன்பும் அறனுமாக என் இதயத்துள் நின்று ஒளிர்பவன் கணபதி.

அறிவினைக் குறிக்கும் இன்னொரு சொல் மதி. மதி என்றால் சந்திரனுமாம். அந்த மதியினைத் திருமுடியில் சூடிய தலைவன் சந்திர மவுலித் தலைவன். கணபதி அந்தத் தலைவனின் மைந்தன்.

அப்படிப்பட்ட கணபதியின் திருவடிகளைக் கருத்தினில் நிலை நிறுத்துவோம்!
அப்படி நிலை நிறுத்தினால் பல பயன்கள் கிடைக்கும். அவற்றைக் கூறுகிறேன். கேளுங்கள்.

பல நேரங்களில் நம்மை நெருங்கி இருந்து யாராவது சொல்லும் சொற்கள் கூட நம் காதில் விழுவதில்லை. கவனம் எங்கோ சென்று விடுகிறது. அப்படி இருக்க, சொல்லாமல் சொல்லும் பல சொற்கள் நம் காதில் விழுந்தால் அப்படி சொல்லாமல் சொன்னவற்றைக் கேட்டு பல விதங்களில் அவர்களுக்கு நன்மைகள் செய்யலாமே. கணபதியைக் கருத்தினில் வைத்தால் காதால் கேட்க முடியாத நுண்மையான ஒலிகளையும் கேட்கும் படியான உட்செவி திறக்கும்.

கண்ணெதிரே நடக்கும் காட்சிகளில் பலவும் கவனத்தில் நிற்பதில்லை. அப்படி இருக்க எங்கேயோ நடக்கும் காட்சிகளும் அகக் கண்களுக்குத் தெரிந்து அதற்கேற்ப நாம் செயல்பட்டு மற்றவருக்கு உதவினால்? கணபதியைக் கருத்தினில் வைக்க அப்படிப்பட்ட அகக்கண்ணும் திறந்து ஒளி தரும்.

இப்படி உட்செவியும் அகக்கண்ணும் செயல்பட எட்டுத் திசைகளில் உள்ளவர்கள் எல்லாருக்கும் உதவிகள் செய்து அவர்கள் மனங்களை எல்லாம் வென்று வெற்றிக் கொடி நாட்டலாம்.

எல்லோரும் நண்பர்கள் எனும் நிலை வந்த போது யாருக்கும் பயப்பட வேண்டிய தேவையின்றிப் போகும். துஷ்ட மிருகங்களும் அன்புடன் பழகும். கண்ணையே செவியாக உடைய நல்ல பாம்பினையும் அன்புடன் கையிலே எடுக்கலாம்.

இந்த நிலை ஏற்பட விடத்தைக் கண்டு பயமில்லை; நோவைக் கண்டு பயமில்லை; கொடிய பகையொன்றும் இல்லாததால் பகையைக் கண்டு பயமில்லை. எல்லாவற்றையும் துச்சமென்று எண்ணி எந்தவித துயரமும் இன்றி மகிழ்ச்சியுடன் தினமும் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வத்துள் ஒருவராக வைக்கப்பட்டு நிலை பெற்று ஓங்கலாம்.

எந்த வித பயமும் இன்றித் தீரும்.

உடலில் இருக்கும் யோக சக்கரங்கள் ஏழில் உச்சந்தலையில் இருக்கும் ஆயிரம் தாமரைச் சக்கரமாகிய சஹஸ்ராரத்திலிருந்து அமுதம் பொங்கும்.

எல்லா விதமாக கலைகளும் கை கூடி வரும்.

மற்றவருக்காக வாழும் வாழ்க்கையே வேள்வி எனும் இறைச்சொல்லிற்கு ஏற்ப வாழும் வாழ்க்கையாம் வேள்வி ஓங்கும்.

என்றும் நிலையாக வாழும் இறப்பிலா வாழ்வினையும் எய்தி இங்கு நாம் வாழலாம்.

இதனை உணர்வீராக.


இந்தப் பாடலை எம்.எஸ்ஸின் அமுதக் குரலில் கேட்க

***

நான்மணிமாலை - அந்தாதியாக வெண்பா, கலித்துறை, விருத்தம், அகவல் என்று மாற்றி மாற்றி பாடல்களைப் புனைந்து சூட்டுவது நான்மணிமாலை எனப்படும். மூன்றாம் பாடல் கற்பகமே என்று நிறைய இந்த நான்காம் பாடல் கற்பகவிநாயக என்று தொடங்கும் தொடங்குகிறது. இந்தப் பாடல் இஃதுணர்வீரே என்று நிறைய அடுத்தப் பாடல் உணர்வீர் என்று தொடங்கும். இந்தப் பாடல் அகவல் பாவகையைச் சேர்ந்தது.

எதுகை: கற்பக - சிற்பர, வாரண - ஆரண, இந்திர - சந்திர, கணபதி - குணமதில், அக்கினி - திக்கெல்லாம், கட்செவி - விடத்தையும், துச்சம் - நிச்சல் - அச்சம்.

மோனை: கற்பக - கடவுளே, சிற்பர - தேவன், வாரண - மலர்த்தாள், ஆரண - அருட்பதம், படைப்பு - பண்ணவர், இந்திர - இதயம், சந்திர - தலைவன், கணபதி - கருத்திடை, குணமதில் - கூற, அக்கினி - ஆண்மை, கட்செவி - கையிலே, விடத்தையும் - வெம்பகை, துச்சம் - துயரிலாது, நிச்சலும் - நிலை, அச்சம் - அமுதம், வித்தை - வேள்வி, இங்கு - இஃது.

Friday, May 21, 2010

செய்யும் தொழில் உன் தொழிலே!


ஏதோ ஒரு காலத்தில் (கற்பத்தில்) விநாயகப் பெருமான் நான்முகப்பிரமனாக இருந்து எல்லா உலகையும் படைத்ததாக வேதங்கள் சொல்லும். கணானாம் த்வா என்று தொடங்கும் வேத மந்திரம் பிரம்ம தேவனே கணபதி என்று சொல்லும். பாரதியாரும் அந்த கருத்துப்படி பல பாடல்களில் பாடியிருக்கிறார். இந்தப் பாடலில் விநாயகரை நான்முகப் பிரம்மனாகவே எண்ணிப் பாடுகிறார். நடுவில் யானை முகனே என்று வரும் ஒரு சொல்லை மட்டும் எடுத்துவிட்டால் இது முழுக்க முழுக்க பிரம்ம தேவனைப் போற்றும் பாடலாகவே தோன்றும்.

செய்யும் தொழில் உன் தொழிலே காண்
சீர் பெற்றிட நீ அருள் செய்வாய்
வையம் தனையும் வெளியினையும்
வானத்தையும் முன் படைத்தவனே
ஐயா நான்முகப் பிரமா
யானை முகனே வாணிதனை
கையால் அணைத்துக் காப்பவனே
கமலாசனத்துக் கற்பகமே


செய்யும் செயல்களெல்லாம் தெய்வத்தின் செயலே என்று எண்ணிச் செயல்களை நிகழ்த்துபடி கீதையில் கண்ணன் சொல்கிறான். அந்தக் கட்டளையை அப்படியே ஏற்றுக் கொண்டு பாரதியார் இங்கே பேசுகிறார். 'செய்யும் தொழில் உன் தொழிலே காண்' என்கிறார். அடுத்து தான் பாரதியின் குறும்பு வருகிறது. நான் செய்பவை எல்லாம் உன் செயல்கள் தான் என்றவர் உன் செயல்கள் சீர் பெற்றிட வேண்டும் அதற்கு நீ அருள் செய்வாய் என்கிறார். என் செயல்கள் சீர் பெற்றிட அருள் செய்வாய் என்றால் வேன்டுதல் ஆகிவிடும். உன் செயல்கள் தான் எல்லாமே; அவை சீர் பெற்றிட நீ அருள் செய்வாய் என்றால் அது ஒரு நினைவூட்டல் மட்டும் தானே. :-)

வாணியைக் கையில் அணைத்துக் காக்கும் ஐயனே; நான்முகப் பிரமனே; யானை முகனே; தாமரை ஆசனத்தில் அமர்ந்திருக்கும் வேண்டியதை எல்லாம் வழங்கும் கற்பகமே! உலகங்களையும் வானத்தையும் வானவெளியையும் முன்பு படைத்தவனே! உன் செயல்களே ஆன என் செயல்கள் எல்லாம் சீர் பெற்றிட நீ அருள் செய்வாய்!


இந்தப் பாடலை நித்யஸ்ரீ பாடி இங்கே கேட்கலாம்.

***

நான்மணிமாலை - அந்தாதியாக வெண்பா, கலித்துறை, விருத்தம், அகவல் என்று மாற்றி மாற்றி பாடல்களைப் புனைந்து சூட்டுவது நான்மணிமாலை எனப்படும். இரண்டாம் பாடல் செய்குவனே என்று நிறைய இந்த மூன்றாம் பாடல் செய்யும் என்று தொடங்குகிறது. இந்தப் பாடல் கற்பகமே என்று நிறைய அடுத்தப் பாடல் கற்பகவிநாயக என்று தொடங்கும். இந்தப் பாடல் விருத்தம் என்ற பா வகையைச் சேர்ந்தது.

எதுகை: செய்யும், வையம், ஐயா, கையால்

மோனை: செய்யும் - சீர், வையம் - வெளியினையும் - வானத்தையும், ஐயா - ஆனை, கையால் - காப்பவனே - கமலாசனத்து - கற்பகமே.

Wednesday, May 19, 2010

பல பிழை செய்து களைத்தேனா?


அவரவர் செய்யும் செயலுக்கேற்ப தான் பயனும் இருக்கும். என்னை இன்று சிலர் திட்டுகிறார்கள்; எனக்குத் துன்பம் விளைவிக்கிறார்கள் என்றால் அது நான் எப்போதோ எங்கோ செய்த வினைப்பயனே. ஆனாலும் தவறு செய்வதை நிறுத்துகிறேனா? இல்லையே. பல பிழைகள் செய்து கொண்டே தான் இருக்கிறேன். அந்த சுழலிலிருந்து தப்ப பாரதியார் ஒரு நல்ல வழியைக் கண்டு கொண்டிருக்கிறார். இந்தப் பாடலில் அதைச் சொல்கிறார் பாருங்கள்.

நீயே சரணம் நினதருளே சரணம் சரணம்
நாயேன் பல பிழை செய்து களைத்து உனை நாடி வந்தேன்
வாயே திறவாத மௌனத்திருந்து உன் மலரடிக்குத்
தீயே நிகர்த்து ஒளி வீசும் தமிழ்க்கவி செய்குவனே


முதலில் நீயே சரணம் என்றார். அவன் பாராமுகமாக இருக்கிறான். இவ்வளவு குற்றங்கள் புரிந்துவிட்டு 'ஐயா நீயே சரணம்' என்றால் நீதிபதியான அவன் எப்படி மன்னிப்பான். பார்த்தார் பாரதியார். அடுத்து நினதருளே சரணம் என்று சொல்லிவிட்டார். அவனது வேண்டுதல் வேண்டாமை இலாத குணத்தை விட அருட்குணம் தானே அடியவரைக் காக்கிறது. அதனால் நினது அருளே சரணம் என்று சொல்லிவிட்டார். நாயைப் போன்ற நான் பற்பல பிழைகளைச் செய்து கொண்டிருந்தேன். இன்றோ அவற்றை செய்து செய்து களைத்து உன்னை நாடி உன் அருளை நாடி வந்தேன். எண்ணம், செயல், சொல் இம்மூன்றிலும் வேறு எந்த வித காரியமும் இன்றி உன்னருளையே எண்ணி மற்றவற்றைப் பற்றி வாயே திறவாத மௌனத்தில் இருந்து உன் மலர் போன்ற திருவடிகளுக்குத் தீயைப் போல் ஒளி விடும் தமிழ்க்கவிதைகளைச் செய்வேன் என்கிறார். அவரோ மகாகவி. மௌனத்தில் இருந்து தமிழ்க்கவிதை செய்வார். நாம்? அவர் கவிதைகளைப் படித்து அவன் மலரடிகளைப் பணிய வேண்டியது தான். கீதையில் கண்ணன் சொன்னதும் அது தானே. பரஸ்பரம் போதயந்த: என்னைப் பற்றி ஒருவர் மற்றொருவருக்குச் சொல்லிப் பொழுதை நன்முறையில் போக்குங்கள்.

இந்தப் பாடலில் ஒன்றைக் கவனிக்கலாம். யாரைப் பாடுகிறார் என்று சொல்லவில்லை. விநாயகர் நான்மணிமாலையில் வரும் பாடல் என்பதால் அவர் பாடும் போது விநாயகரை எண்ணியேப் பாடலை இயற்றினார் என்று சொல்லலாம்.

இந்தப் பாடலை எம்.எஸ்ஸின் அமுதக் குரலில் கேட்க

***

நான்மணிமாலை - அந்தாதியாக வெண்பா, கலித்துறை, விருத்தம், அகவல் என்று மாற்றி மாற்றி பாடல்களைப் புனைந்து சூட்டுவது நான்மணிமாலை எனப்படும். முதல் பாடல் நீயே என்று நிறைவு பெற்றது. இந்த இரண்டாம் பாட்டு நீயே சரணம் என்று தொடங்குகிறது. இந்தப் பாடல் செய்குவனே என்று நிறைய அடுத்தப் பாடல் செய்யும் என்று தொடங்கும். இந்தப் பாடல் கலிப்பா வகையைச் சேர்ந்தது.

எதுகை: நீயே, நாயேன், வாயே, தீயே

மோனை: நீயே - நினதருளே, நாயேன் - நாடி, வாயே - மௌனத்திருந்து - மலரடிக்கு, தீயே - தமிழ்க்கவி.

விநாயகர் நான்மணி மாலை


விநாயகர் நான்மணி மாலை என்ற தலைப்பில் மகாகவி சுப்ரமணிய பாரதியார் புதுவை மணக்குள விநாயகப் பெருமான் மேல் ஒரு நூலை இயற்றியுள்ளார். வெண்பா, கலித்துறை, விருத்தம், அகவல் என்ற நான்கு வித பா வகைகளில் பாடல்கள் புனைந்திருக்கிறார். மொத்தம் நாற்பது பாடல்கள் இந்த நூலில் இருக்கின்றன. மிக அருமையான கருத்துகள் பல இந்தப் பாடல்களில் இருக்கின்றன. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

சக்தி பெறும் பாவாணர் சாற்று பொருள் யாதெனினும்
சித்தி பெறச் செய்வாக்கு வல்லமைக்கா - அத்தானே!
நின் தனக்குக் காப்புரைப்பார் நின் மீது செய்யும் நூல்
இன்றிதற்கும் காப்பு நீயே.


சக்தியின் அருள் பெறும் பாக்கள் இயற்றுவதில் வல்லவர்கள் எந்தப் பொருளைப் பற்றி நூற்களை எழுதினாலும் அது நன்கு அமையும் படி வாக்கு வன்மை பெற தலைவனே உனக்கு காப்புச் செய்யுள் உரைப்பார்கள். உன் மீது இயற்றப்படும் இந்த நூலுக்கும் நீயே காப்பு.